Indian Railways News => Topic started by RailXpert on Aug 04, 2013 - 23:59:14 PM


Title - சேலம்–ராசிபுரம்–நாமக்கல் வழியாக சென்னை–பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலை அடுத்த மாதம் முதல் இயக்க ஏற்பாடு
Posted by : RailXpert on Aug 04, 2013 - 23:59:14 PM

சேலம்,ஆக,3–

சேலம்–ராசிபுரம், நாமக்கல்–கரூர் அகல ரெயில் பாதையில் சேலம்–கரூர் மற்றும் கரூர்–சேலம் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை–மதுரை மற்றும் மதுரை–சென்னை தூரந்தோ ரெயில்களும், சரக்கு ரெயில்களும் இந்தப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் (செப்டம்பர்) மாதம் முதல் சென்னை–பழனி ரெயில் இந்தப்பாதையில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் தினமும் இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்–16001) மறுநாள் அதிகாலை 2–55 மணிக்கு நாமக்கல் சென்று சேரும்.பின்னர் நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு பழனி போய்ச் சேரும். பழனியில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்–16002) மறுநாள் அதிகாலை 1–50 மணிக்கு நாமக்கல் வந்து சேரும். பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு காலை 8–30 மணிக்கு சென்னை சென்ட்ரல் போய்ச்சேரும்.

இந்த ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல். அக்கரைப் பட்டி, ஒட்டன் சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கும். பழனி–சென்னை ரெயில் (எண் 16002) மட்டும் சென்னை பெரம்பூரில் நிற்கும்.

இந்த ரெயிலில் மொத்தம் 17 பெட்டிகள் இருக்கும். ஒரு இரண்டடுக்கு ஏர்கண்டிசன் பெட்டி, ஒரு மூன்றடுக்கு ஏர்கண்டிசன் பெட்டி, தூங்கும் வசதி கொண்ட 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகள். முன் பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய வசதியாக 6 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள். சரக்கு–பிரேக் வேன் அடங்கிய மாற்றுத் திறனாளிகளும் அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்களும் பயணம் செய்யும் வசதி கொண்ட 2 இரண்டாம் வகுப்பு பெட்டியும் இருக்கும்.

இந்த ரெயில் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பழனியில் நேற்று காங்கிரஸ் எம்.பி சித்தன் தெரிவித்தார். மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ரஸ்தோகி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும் போது சென்னை–பழனி ரெயில் விரைவில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுஜாதா ஜெயராஜ் கடந்த வாரம் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போதும் இந்த ரெயில் அடுத்த மாதம் முதல் இயக்கப்படும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.