Indian Railways News => Topic started by ConfirmTicket on May 16, 2013 - 21:00:04 PM


Title - பழனி-சென்னை இடையேயான பழனி முருகன் எக்ஸ்பிரஸ்: ஜூலை முதல் வாரத்தில் இயக்கம்
Posted by : ConfirmTicket on May 16, 2013 - 21:00:04 PM

திண்டுக்கல், மே.15-

மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழனி-சென்னை இடையிலான பழனி முருகன் எக்ஸ்பிரஸ் ஜூலை முதல் வாரத்தில் இயக்கப்படலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவது பழனி நகரம். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

பெரும்பாலும் இவர்கள் பஸ் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். காரணம் பழனிக்கு ரெயில்வே பாதை இல்லாமல் இருந்தது. மீட்டர் கேஜ் பாதையில் இருந்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே பழனிக்கு வருவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனவே பழனி நகருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ரெயில்வே சேவை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வந்தது. அதன்படி இந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு திண்டுக்கல் முதல் பழனி வரை ரெயில்சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இது பாலக்காடு வரை நீடிப்பு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

இதனிடையே பழனி நகரை மையமாக கொண்டு பழனி-திருச்செந்தூர், பழனி-மதுரை மற்றும் பழனி-சென்னை இடையே “பழனி முருகன்” எக்ஸ்பிரஸ் புதிய ரெயில்கள் கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பழனி-மதுரை ரெயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. பழனி-சென்னை ரெயிலை இயக்க ரெயில்வே போர்டின் அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் ரெயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ரெயில்வே போர்டின் அங்கீகாரம், ரெயில்வே பட்டிகள் தயார் நிலை என அனைத்து பணிகளும் ஜூலை 1-ந் தேதிக்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பழனி-சென்னை இடையே “பழனி முருகன்” எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை முதல் வாரத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் பழனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடையும் என்று ரெயில்வே துறையினர் தெரிவித்தனர்.